ஆதவன் உடல்
சோர்ந்து துயிலுறும்
இருள் போர்த்திய இரவுகளிலும்
ஓயாது விழித்திருந்து
வெள்ளிழைகளால்
வலை பின்னுகிறாய்
கைதேர்ந்த கலைஞானியின்
கலை நுட்பத்தை
விஞ்சிவிடும் ஆற்றல்
எங்கிருந்து பெற்றாயோ?
நீ இழைக்கும்
நூல் இளைகள்
காற்றின் வீச்சினில்;
கலைந்துவிடுமென
தோற்றத்தில் மெல்லியதாய்
மாயத்தோற்றம் காட்டினாலும்
வலுவும் நீட்சித் திறனும்
கொண்டவையாமே
எட்டுக்கால் உள்ள போதும்
துள்ளிப் பாய மாட்டாய்
சப்பிச்சுவைத்திட
பல்லில்லாக் கிழவியாம்
உணர்விழைகளும்
இல்லாத போதும்
பூச்சி புழுக்களை
நீ உமிழும் திரவத்தில்
கரைத்து நீர்மமாக்கி
உறிஞ்சி உண்டுவிடுகிறாய்
கரந்துறையும் ஜீவன் நீ
உன் உறவுகள் அரை
இலட்சத்தையும் தாண்டுமாமே
பூவுலகில் முன்னூறு மில்லியன்
ஆண்டுகள் வாழ்ந்துவிட்டாயாமே
அப்பாவிபோல
என்வீட்டு மரஞ்செடியில்
வலைவிரிந்து உறங்கிறாய்
முட்டையிட்டு
கூட்டுப் புளுவாகி
பரம்பரை பெருக்குகிறாய்
நஞ்சுண்டு கொல்லுகிறாய்
ஸ்பைடர்மான்
எனத் திரையிலும் வருகிறாய்
நஞ்சுண்டகண்டனென
சிவனைத் துதிப்பர்
கண்டமின்றி
நஞ்சுமிழும் உனக்கு
இணையாவானோ?
எம்.கே.முருகானந்தன்
0.0.0..0.0.
ஆஹா! சிலந்திக்கு இப்படி ஒரு அழகான கவிதையா? சிலந்தியின் வாழ்வையே படம் பிடித்துக் காட்டிவிட்டீர்களே, ஐயா!
ரொம்பவும் ரசித்தேன்!
நன்றி சகோதரி
சிலந்தி பற்றிய சில தகவல்களையும் சேர்க்க விரும்பியதால் அவ்வாறு எழுத நேர்ந்தது
படம், தங்களின் அருமையான சிந்தனை வரிகளும் மிகவும் ரசித்தேன்…
வாழ்த்துக்கள் ஐயா…
திண்டுக்கல் தனபாலன் நன்றி
உங்கள் தேடலும் வாசிப்பும்
ரசனையும் மலைக்க வைக்கின்றன.
அய்யா சிலந்தி கவிதை அருமை ,
நன்றி S.Gnanasekaran
நோய்வந்தால் மருந்து தருவீர்கள் என வலைவிரித்து குடும்பமாக வசிக்கின்றதோ 🙂
படம் நன்றாக இருக்கின்றது.
நன்றி மாதேவி.
நஞ்சு உமிழ்ந்து வயிறு நிரப்பும் ஜீவனுக்கு
என் மருந்தெதற்கு
தப்பினால் போதும் என ஓட்டம் எடுக்க வேண்டிய நிலை எனக்கு
நிதானம் தாங்கிய வேகம்:
/எட்டுக்கால் உள்ள போதும்
துள்ளிப் பாய மாட்டாய்/
/ஆதவன் உடல்
சோர்ந்து துயிலுறும்
இருள் போர்த்திய இரவுகளிலும்
ஓயாது விழித்திருந்து/
ஆமாம் thugeev
அதன் நிதானமும் செயற்பாடுகளையும்
அவதானிக்க ஆச்சரியம் ஏற்படுகிறது.
வணக்கம்
ஐயா
வலைத்தள உறவுகளுக்கு
வலை பின்னும்
சிலந்தியின் பின்னல் அழகை
கவியாக வடித்து
வாசக உள்ளங்களுக்கு
கவி விருந்து அளித்தமைக்கு
மிக்க நன்றி ஐயா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
ஆஹா… சிலந்தி வாழ்வையும் கவிப்படமாக்கி காட்சிக்குவிட்ட திறமை… அருமை ஐயா! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி இளமதி
நஞ்சுண்டகண்டனென
சிவனைத் துதிப்பர்
கண்டமின்றி
நஞ்சுமிழும் உனக்கு
இணையாவானோ….
மனிதனுக்காய் இயற்கை என்ற நிலை இன்று
இயற்கையில் மனிதனும் சிலந்தியும் ஒன்றே
அஃறிணைக்காய் கவி வடிக்கும்
உங்கள் பணி
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி Niluxsi Puvanenthiran
“நஞ்சுண்டு கொல்லுகிறாய்
ஸ்பைடர்மான்
எனத் திரையிலும் வருகிறாய்
நஞ்சுண்டகண்டனென
சிவனைத் துதிப்பர்
கண்டமின்றி
நஞ்சுமிழும் உனக்கு
இணையாவானோ?”
வலையில் வலைக் கவிதை மிக அருமை.
படித்து ரசித்தேன்.
நன்றி பழனிவேல்