உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென.
அன்பே!
வாழ்த்திசைப்பேன் தினந்தோறும்
உன்னாசைகள் நிறையவென
மோகம் முகிழ்ந்தெழ
ஆத்மாவின் உந்தலில்
சிறகடித்து பறந்து வந்து
உன்னருகே அமர்ந்தபோது
கண்டும் காணாத
புறக்கணிப்பில்
சிறகொடிந்த பறவையானேன்.
உடைந்து நொருங்கியது உள்ளம்.
மாஞ்சோலைகளிலும்
இலுப்ப வனங்களிலும்
இணையாகப் பறந்தோமே
சொண்டுகள் உரச
இறக்கைகள் போர்வையாக
குலவி மகிழ்ந்தோமே!
மறந்து போயினவா?
தேன் சிந்திய காலங்கள்
இருந்தும் மகிழ்கிறேன்
சத்தியமாய் மகிழ்கிறேன்
மரக்கிளைகளில்
மறைந்திருந்து
மற்றொரு இணையுடன்
சுகித்திருந்ததை
பாழ்விழிகள் பார்த்தபோதும்
மகிழ்கிறேன்
உன் ஆனந்தத்தில்
கரைந்தது
என் துயர்.
உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென…..
இருந்தாலும்
மரணித்த காலங்கள் ஜனிக்காது
வலியெடுக்க உணர்கிறேன்.
தொல்லை கொடுக்க மாட்டேன்
வளைய சுற்றி வந்து
காதிற்குள் காதல்வரி
சொல்லவும் மாட்டேன்
இனி ஒருபோதும்.
வானத்தில் உலாவுகையில்
என்றாவது ஒரு நாள்
என்முகம் காண நேர்ந்தால்
மறுபுறம் திரும்பிவிடு
கண்ணீர் சிந்தும்
என்முகம் கண்டு
குற்றவுணர்வு
உனைத் தீண்டக்கூடாது
குதூகலம் குன்றக் கூடாது
உன் வாழ்வில்.
உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென…..
எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0