காகக்திற்கு அன்னம் வைத்தல்

காகக்திற்கு அன்னம் வைத்தல்

காகத்திற்கு வைத்தல்

காகக்திற்கு அன்னம் வைத்தல்
காலாகாலமாக நம் வழக்கம்
சின்னதாக வாழையிலையில்
செஞ்சோறு கறியுடன், வடை மோர் மிளகாய்ப் பொரியல்
பப்படம் பாயாசம் தயிர் என அழகாய்ப் படைத்து
கா காக் கீச்சுக் குரலில்
காகம் போலக் கரைகுரலெடுத்து
ஊரெங்கும் கேட்க உயர்த்தி வாசிக்க
காகங்கள் கூட்டமாக விருந்துண்ட
காலமெல்லாம்
மறந்துபோன கதைகளில்தான்.

இன்றோ ?
மாடிவீட்டில் மசுங்கி மசுங்கி
கீழ் வீட்டார் தலையில்
அபிசேகமாகுமா பதைபதைப்புடன்
லன்ஞ் பேப்பரில் சுட்டி வைத்ததை
சாப்பிட வருவாராவென
அவதியோடு பார்த்திருந்தும்
காகங்கள் பிசியோ பிசி
காணவில்லை அருகெங்கும்.

காகங்கள் காணாதொழிந்ததில்
கொண்டாட்டம் எறுப்புகளுக்காம்
பெரும் கூட்டாக வந்து விருந்துண்டபோதும்
மிஞ்சிக் கிடக்கிறதாம் உணவின்னும்
அருமந்த மனைவியார்
நசுக்கிடாது நக்கலடிக்கிறார்.

எம்.கே.முருகானந்தன்.

வாடிச் சரிந்த அம் மலருக்கு பிரியாவிடை

வாடிச் சரிந்த அம் மலருக்கு பிரியாவிடை

வாடிச் சரிந்த அம் மலருக்கு பிரியாவிடை!!!!

வாடிய மலர்

வாடிச் சரிந்தது அம் மலர்
தனக்கே உவப்பான தடத்தில் நடந்து
தனக்கென விதிக்கப்பட்ட பொழுதில்
வான் தகிக்கும் கோடை நாளில்
கூர்விழிகள் தாமே சோர
செந்நிற இதழ்களை மெல்லென மூடி
அமைதி கொண்டது.

பூரித்து இதழ் விரித்து
முழுமையாயது மலர்ந்த நாள் இனியது.
செழுமையான வண்ணங்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன!
தேனினை நாணவைத்தது அதன் இனிமை
வாசனை பூமியெங்கும் கமகமத்தது.
வடிவ நேர்த்தியில்
சிற்பியின் கைவண்ணம் ஒளிர்ந்தது.

மனிதரும் மலரனைய மென்மையுடன்
வாழலாமென இலக்கணம் வகுத்தது.
அன்பு கருணை இரக்கம்
அருவியெனப் பொழிந்ததது
அம் மலரிருந்து.

தன்துயர் மறைத்து
மற்றோர் நினைவுகளில் களிகொள நீந்தியது
மன்னுயிர்கள் மகிழத் தியாகங்கள் பொழிந்தது
பிற சாவுகளைத் தன் பணியால்
காத்துப் பிழைக்க வைத்தது.
இன்று அது சாய்ந்து வீழ்ந்தது.
ஆனால் கருகிச் சாம்பராகவில்லை
காற்றாகக் கரைந்துவிடவில்லை.

விதைத்த விதைகள் வீர்யமானவை
வீறுகொண்டெழல் நியதி.
அன்பு, அமைதி, நல்லிணக்கம்
மற்றும் மகிழ்ச்சியென
புத்துலகில் புது மலராக
துளிர்விடும் நாள்
தொலைவில் இல்லை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

சுப்பர் மடச் சுடுகாடு

சுப்பர் மடச் சுடுகாடு

எங்கப்பரின் அப்பர் அவரின் அப்பரென
அடியடியாக
இச் சுப்பர் மடச் சுடுகாட்டில்
தணலடங்கச் சாம்பராயினர்

முருகைக்கல்
அணை காக்கும்
பாக்குத் தொடுவாய்
கரை நீரில் சங்கமாகி
இந்துமாக் கடலேகி
உலகளந்தனர்.

செகண்ட் ஷோ முடிந்தவேளை
ஜாலியாகச் சத்தமிட்டு
ஜோலியான பகடிகளும்
கழுதை நாணும் பாடல்களுடன்
டபிளோடி வரும்வேளை
எரிதணலில் எழுந்திருப்பார்
சிதையெரியும் பிணம்
கெலி கெளவி சிறுநீர் சிந்த
விரைந்தோடியது
ஒருகாலம்.

சண்டையில் சவுக்களுடன்
சனங்களும் காணாமல் போயினர்
எரித்தலுக்கு சுடுகாடு
செல்லத் தடையாயிற்று.
நெடுதுயர்ந்த சவுக்கமரங்கள்
நிழல் கொடுத்த காலம்
கனவாயிற்று.

பின்னொருகால் மீண்ட வேளை
மீந்திருந்தது உடைந்த சுவர்களும்
இடிந்த மண்டபங்களும்
எம் கனவுகள் போல்
சிதைந்தே கிடந்தன .

ஊர் பிரிந்து உறவிழந்து
பிறதேசம் புகலானோர்
மீண்டொருகால் தம்தேசம் வருவாரோ
சிதையெரிய சுப்பர் மட
சுடுகாட்டில் அவர்க்கு
இடமுண்டோ?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

மஞ்சளும் காவியும் சில சிந்தனைகள்..

மஞ்சளும் காவியும் சில சிந்தனைகள்..

இஞ்சரும் இனிவேண்டா

இகவாழ்வு எனக்கென

சஞ்சலம் குடிகொள்ள

சிந்தனை சலித்து

சிவனேயெனக்

கானகம்  நாடும்

ஞானியர் பூணும்

வண்ணவேடமது

மஞ்சளும் காவியும்தான்.

0.0

எனக்கெதற்கு இவையென எண்ணி

ஒதுங்கி மருளு வேண்டா

இன்னமும் பல இதமான சங்கதிகளும்

மஞ்சளும் காவியுமுள்ளே கரந்துள.

0.0

எத்தனை நிறம் இங்கிருந்தாலும்

அத்தனையும் அள்ளி அலங்கரிக்கும்

நந்தன வனிதையர்

நாடும் மங்களங்களிலும்

இவையனைத்தும்

கோலமிடும்.

0.0.0

மத உரிமை பறித்து,

மசூதி தகர்க்க வன்மை ஓதியதில்

வண்ணத்தின் மாண்பு குலைந்து போனது

இருந்தபோதும் அதை

அலங்கோலமென நிந்தித்தல் அழகல்ல

பதர்களிடையே பயனுறு மூலிகை போலப்

புனிதர்கள் எங்கும் உண்டு

0.0.0

நித்தமும் நாமுண்ணும்

அத்தனை உணவுகளும்

சுத்தமாய் ஜீரணித்து

எச்சமாக வருவதும்

மஞ்சளும் காவியுமாகவே.

0.0.0

நிறங்களோ ரைந்துடையாய்

மறைந்திருந்தாய் எம்பெருமானெனப்

போற்றிப் பரவிடினும்

 சிகப்பு, மஞ்சள், நீலம் என

வண்ணங்கள் மூன்றே அடிப்படையிலென

விஞ்ஞானம் கூறிடுதே

காவி அங்கு மாயாமானதே.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

விறைத்தெழுந்து வருவாய் ..

விறைத்தெழுந்து வருவாய் ..

விறைத்தெழுந்து வருவாயென

உளக் கிளர்ச்சியுடன் காத்திருந்தேன்

நிமிர்ந்தெழத் திராணியற்று

சோர்ந்து கிடக்கின்றாய்.

விறைத்தல் செயற் பிறழ்ச்சி

Erectile Dysfunction

மனவிருப்பிருந்தால்

சோரேன் எனும் திடமிருந்தால்

வாழ்க்கை சொர்க்கமாகும்.

Erectile dysfunction விறைத்தெழும் செயல் பிறழ்ச்சி

ஆண்மைக் குறைபாடு கிளிக் பண்ணுங்கள்.

இது 2008 ல் எழுதிய கட்டுரை.

புதிய கட்டுரை விரைவில் வரும்

00.00

வேலிக் கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்

வேலிக் கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்

கள்ளுண்போர் காட்சி- யாழ்ப்பாணன் கவிதை

நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்களங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாம்ஞ்
சிதைத்தவர் குடித்தலாலே
சாடியா உந்தி வீங்கும்
சதமுமிக் காட்சி காண்பீர்.

மதுவினைக் குடித்து மாந்தி
வழியெலாம் ஆட்டம் போட்டு
எதிர்வரும் மக்களோடும்
எந்திரம் பலவற்றோடும்
நிதமுமே மோதி நிற்பார்
நலத்தினிற் புரள்வர் அன்னார்.
விதவிதக் காட்சி காட்டி
வேடிக்கை செய்வர் மன்னோ.

கோயிலிற் குடியர் கூட்டம்
குளத்தினிற் குடியர் கூட்டம்
வாயிலிற் குடியர் கூட்டம்
வழியெலாங் குடியர் கூட்டம்
நாயெனத் திரியும் கூட்டம்
நரியெனத் திரியும் கூட்டம்
பேயனெத் திரியும் கூட்டம்
பெருகுதல் நாளும் காண்பீர்.

எனது ஊரான வியாபாரிமூலையைச் சேர்ந்த

மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய கவிதை இது.

1951ம் ஆண்டு வெளியான அவரது கவிகை் கன்னி  நூலிலிருந்து

அவர் எழுதிய மேலும் இரு கவிதைகளுக்கான இணைப்பு.

சூரியோதயம் – யாழ்ப்பாணன் கவிதை

ஜீவ இரக்கம் கவிஞர் யாழ்ப்பாணன் பாடல்

மஞ்சுகளின் கொஞ்சலை விஞ்சுகிற பறையொலி

மஞ்சுகளின் கொஞ்சலை விஞ்சுகிற பறையொலி

மஞ்சுகளின் கொஞ்சல்

மஞ்சுகளின் கொஞ்சல்

 கண்ணனின் வர்ணமென பரவுகின்ற
வண்ணப் பெருந்திரையில்
வெண்ணாடை  தழுவ
மெல்லெனத் மிதந்து நீயும்
தவழ்கின்ற காட்சி கண்டேன்.

உன்னருகில் அணைய வந்த
பஞ்சனைய மஞ்சின்
வதனமொடு வதனம் மேவி
உதட்டுடன் உதடுகள்
வேட்கையொடு
கெளவியபோது
உன்னருகில் என்னை நானும்
உருவகித்து விண்ணில்
பரவசவித்து மிதந்தேன் .

மீண்டுமொருக்கால்
முத்தமிடும் எண்ணம்
மூர்க்கமாய் எழுந்தபோது
அடிவயிறு பிசுபிசுக்க
அரியண்டமுடன்
அதைத் துடைக்க
ஊர்ந்தன கைகள்.

‘பாட்டாவிற்கு பாயுடன்
மூத்திரம் போட்டுது’
பேரனின் கூவல் ஊரெழுப்பக்
கலைந்தது கனவு.

படுக்கையில் முடங்கிய வாழ்வு
பாடாய்ப் படுத்துகிறது.
பாடையில் செல்லும் வேளை
விரைந்தென்னை தழுவாதோ
ஏங்கி ஒடுங்கப்
பாசமுடன் அழைத்தது
பறையொலி என்னை.

எம்.கே.முருகானந்தன்

கழித்த சனியனை தலையிற் சுமத்தும் வம்போ

கழித்த சனியனை தலையிற் சுமத்தும் வம்போ

படைத்த சோற்றில் எனக்கும் பங்கோ
கழித்த சனியனை தலையிற் சுமத்தும் வம்போ
ஒழித்தென்னை மாய்க்க வைத்த நஞ்சோ
எதற்கும் சற்று அவதானமாயிருதல் நன்று
மானிடரை நம்பல் முடியாது.

எம்.கே.முருகானந்தன்

இலைமீது படிந்திற்ற மாசகற்ற மழை நீரால் ….

இலைமீது படிந்திற்ற மாசகற்ற மழை நீரால் ….

மாநாகரின் தெருநிறைத்து
வாகனங்கள்
பொழுதடங்க ஓடும்.
அது உண்டு கழித்திட்ட
கருவாயு குதம் பிரிந்து
வளி எங்கும் நோய் கொடுக்கப் பரவும்.

உயிர்வாழ
மாசுண்ணும் தாவரங்கள்
உயிர் வாய்வை
வளியெங்கும்
இரவெல்லாம் நிறைக்கும்.
அதைச் சுவாசிக்கும் உயிரினங்கள்
களிகொண்டு
பலவாகப் பெருகும்.

மிதந்தெழுந்த குளிர்காற்று
வெண்முகிலைத் தழுவ
சூல் கொண்டு கரு தாங்கி
மழைமேகம் ஆகும்.
அது பொழிந்த மழைநீரால்
பூவுலகு செழித்தோங்கி வாழும்.

தெருத்தூசி படிந்து அழுக்குறையும்
கொடி செடியின் மாசகற்ற
மழை நீரால் முடியும்.
அகமெங்கும் மாசுற்று
தூஷணையைப் பொழியும்
பாழ் மனம் தன்னைச்
சீர் செய்ய இங்கெவர்க்கு முடியும்?

மனதொடுக்கும் உளப் பயிற்சி
மனதூண்றிக் கைப்பிடித்தால்
உலகுள்ள உளமனைத்தும்
நிர்மலமாய் ஒளிரும்.

0.0.0.0.0.0.0

எம்.கே.முருகானந்தன்.

தண்ணீரில் நடந்து வாரார் தண்ணிப் பூச்சியார்

தண்ணீரில் நடந்து வாரார் தண்ணிப் பூச்சியார்

தண்ணீரில் நடந்து வாரார்
தத்தளிப்பு சற்றுமின்றி
முன்னங்கால் சற்றுக் கட்டை
பின்னு ரண்டும் வலு நீளம்
ஆறு கால்கள் ஆனாலும்
அரை இஞ்சி நீளம்தான்
அவருடல் முற்றாக.

கறுப்பு இவர் நிறமானாலும்
மண்ணிறத்து உறவுகளும் உண்டு
தண்ணீரில் தாளமிட்டு
தன்னிணைக்கு தூதுவிடுவார்.

நீர்ப் பரப்பில் விரைந்தோடி
தான் தப்பி
தனக்கிரை தேட
கூர்மையான கருவிழிகள்
வழி காட்டும்.
முன்கால்கள் இரண்டும்
இறுக்கமாக
அப்பிக் கொள்ளும்.

நுளம்பு போன்ற உருவானாலும்
மனித இரத்தம் குடிப்பதில்லை.
பூச்சி புளு உடல் துளைத்து
சாரத்தைத் பருகி
தன் வயிறு நிறைத்திடுவார்.
ஊசிபோன்ற
நீளமான தும்பிக்கை
ஸ்ரோவால் உறிஞ்சிடுவார்.

சலசலத்து ஓடாத தங்கு நீர்
இவருக்கு உகந்ததாகும்.
கேணியிலும் குடியிருப்பார்
கிணற்றிலும் குதூகலிப்பார்
வீட்டு வாளி நீரிலும் சமாளிப்பார்
வழி தவறி வந்திட்ட இவர்
என் வீட்டுச் சுவரில்
இளைப்பாறுகிறார்.

எம்.கே.முருகானந்தன்.